சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

223 0

சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.

எனினும் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் தபால் வாக்களிப்புக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவினை தவிர்ந்த ஏனைய சகல பகுதிகளிலும் இன்று முதல் ஏழு நாட்கள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய சுகாதார சேவைகள் அதிகாரிகள் இன்றைய தினம் வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.