36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்

230 0

உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 58 இந்திய வம்சாவளியினர் 36 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணி அமர்த்தி வேலை வாங்குகிறார்கள்.

அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என 11 உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 58 இந்திய வம்சாவளியினர் தலைமைப்பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது நிறுவனங்களுக்கு 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.75 லட்சம் கோடி) வருமானம் ஈட்டி தருகிறார்கள்.

அது மட்டுமல்ல அவர்கள் 36 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணி அமர்த்தி வேலை வாங்குகிறார்கள்.

இதுபற்றி அமெரிக்காவின் சிலிகான் வேலியில் உள்ள தொழில் அதிபரும், இந்தியாஸ்போரா அமைப்பின் நிறுவனருமான ரங்கசாமி கூறுகையில், “இடம் பெயர்ந்த இந்தியர்கள் வர்த்தக உலகில் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியர்கள் வங்கி, மின்னணுவியல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிக்கிறார்கள். 37 வயதானவர்கள் முதல் 74 வயதானவர்கள் வரையில் இந்த சாதனை பட்டியலில் உள்ளனர்” என குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் அவதியுறுகிற நேரத்தில், இவர்கள் அனைவரும் தங்களது நிறுவனங்கள் மூலம் ஏராளமான மனிதாபிமான உதவிகளை செய்துள்ளனர். தங்கள் ஊழியர்களையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்பது முக்கிய அம்சம்.

இந்த சாதனை இந்திய வம்சாவளியினர் பட்டியலில் ஆப்டிவ் மற்றும் அவந்தோர் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றும் குப்தா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, வெர்டெக்ஸ் பார்மாசியூடிகல்ஸ் தலைமை செயல் அதிகாரி ரேஷ்மா கேவல்ரமானி என பட்டியல் நீளுவது குறிப்பிடத்தக்கது.