யானை தாக்குதலால் தந்தை பலி

398 0

வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்துக்கு விறகு வெட்டச் சென்ற ஒரு பிள்ளையின் தந்தையான 64 வயதுடைய  சின்னத்துரை சுந்தரலிங்கம், யானையின் தாக்குதலுக்குள்ளாகி நேற்று(03) உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலிருந்து அவரின் நண்பருடன் கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்துக்கு விறகு வெட்டுவதற்கு சென்று இருவரும் அப்பிரதேசத்தில் வெவ்வேறு பக்கமாக விறகு வெட்டுவதற்கு சென்றபோது, யானையின் சத்தம் கேட்டு அவருடன் சென்ற நண்பர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது தனது நண்பரான சின்னத்துரை சுந்தரலிங்கம்,  யானையின் தாக்குதலில் அகப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ், விசாரணைகளின்  பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி வவுணதீவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.