ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆரம்பம்

313 0

download-1முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க மற்றும் ஏழு பேர் அடங்கிய ஜுரி சபையினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜுரி சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பட்டதாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.இவர்களில் 6 பேர் பெண்கள் என்பது விசேட அம்சமாகும்.இந்த சம்பவத்துடன் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புப்பட்டுள்ளதாக அரசத் தரப்பு சட்டத்தரணி ஆரம்ப கட்ட விசாரணைகளின் போதே தெரிவித்திருந்தார்.

இந்த கொலையை நடாத்துவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை செலுத்தி நபர் அரச தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கிரிதலை இராணுவ முகாமிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி தரப்பினருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியொன்றே இந்த கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக அரசத் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் 6 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த வழக்கு விசாரணைகளில் மூன்று பிரதிவாதிகள் மாத்திரமே ஆஜராகியுள்ளனர்.ஏனைய மூன்று சந்தேகநபர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுவதாக அரசத் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.அந்த சந்தேகநபர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி, நீதிமன்ற விசாரணைகளை புறக்கணித்து வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.