சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்தமை கவலையளிக்கிறது – தயாசிறி

322 0

சிறிலங்காவில்  பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது கவலை அளிக்கிறது  அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று ( வெள்ளிக்கிழமை)  ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுனவால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்காரணமாகவே தனித்து போட்டியிடுகின்றோம். தற்போது கவலைப்பட்டு பயன் இல்லை.

இங்குள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், கட்சியின் வேட்பாளர்களைத்தான் ஆதரிக்கவேண்டும். மாற்று தரப்புகளுக்கு ஆதரவு வழங்கினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்படும். பிரதேச சபை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படு தோல்வியடையும் என்பது உறுதி. பலம்மிக்க கட்சி பிளவுபட்டது கவலைதான். அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும்.

2011 உலகக்கிண்ணம் நடைபெறும்போது நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கவில்லை. எனவே, இறுதி போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதா என என்னால் கூறமுடியாது. தகவல்கள் இருப்பின் அவை வெளிப்படு2த்தப்படவேண்டும்.” – என்றார்.