சென்னையில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின் போது விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர், பிராண வாயுவை அறிய உதவும் கருவி, கபசுரக் குடிநீர் சூரணம், முக கவசம் உள்ளிட்டவற்றை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-
சென்னையில் 140 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின் போது விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

