சிறிலங்காவில் கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை

237 0

அவுஸ்ரேலியாவில் இருந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கறவைப் பசுக்களும் அவற்றின் சந்ததியும் இறந்துவிட்டதால், கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான சிறிலங்கா அமைச்சரவை திட்டத்தை இடைநிறுத்துமாறு அகில இலங்கை கமநல சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு கடந்தவாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது நாட்டில் நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் நாளாந்தம் 3.5 மில்லியன் லீற்றர் பால் தேவைப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியிருந்தார்.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவிலிருந்து நோயுற்ற பசு மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்கத்தின் ஒரு பகுதியின் அக்கறையின்மை காரணமாக பால் விவசாயத் துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மையில் மாடுகளை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் அவுஸ்ரேலியாவில் இருந்துவரும் கறவைப் பசுக்களுக்கு இலங்கையின் காலநிலை பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு 73 மில்லியன் ரூபாய் செலவிக்கின்றது என குறிப்பிட்ட நாமல் கருணாரத்ன எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

2020 ஆம் ஆண்டளவில் இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த முயற்சியை 2014 ஆம் ஆண்டில் அப்போதைய பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடங்கினார்.

20,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய 2014 ஆம் ஆண்டில் கடந்த அரசாங்கத்தின் கீழ் 73 மில்லியன் டொலருக்கான ஒப்பந்தம் அவுஸ்ரேலியாவின் வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட்ஸ் (பி.டி.) லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்தானது.

இந்த திட்டத்தை பின்னர் அமைச்சர் பி. ஹாரிசன் புதுப்பித்தமையினை தொடர்ந்து, அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவினால் தொடரப்பட்டது.

இதன்பின்னர் 2017 மார்ச் 24 அன்று இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து, 2017 மே 12 அன்று நியூசிலாந்திலிருந்து 2,000 கறவைப் பசுக்களையும் மீண்டும் 2017 டிசம்பரில் அவுஸ்ரேலியாவில் இருந்து 3,000 கறவைப் பசுக்களையும் அரசாங்கம் இறக்குமதி செய்தது.

இதன்பின்னர் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பால் இந்த திட்டம் கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

எனவே கடந்த திட்டத்தின் விளைவாக நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.