பெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்

318 0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

நாங்கள் கட்டாயமாக கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிகளவு ஆசனங்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். குறிப்பாக நமது பெரும்பான்மையினை இந்த நாடாளுமன்றத்தில் காட்டாதுவிட்டால் இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள் பற்றி மக்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த ஜனாதிபதியானவர் இராணுவ ஆட்சிக்கு இந்த நாட்டினை கொண்டு வந்துள்ளார். எனவே தேர்தலிலும் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ. எனினும் அவரது செயற்பாடுகள் முழுவதும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கும்.

சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக்கூட தடை செய்யக்கூடிய நிலை ஏற்படும். எனவே இந்த ஜனநாயகம் அற்ற செயற்பாடுகளை எதிர்கொள்வதாக இருந்தால் நாம் ஒரு பலமான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்  எனறார்.