அனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி

289 0

பொலிஸ் அனுமதி மறுப்பு, புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 10.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபையில் கொரோனா வைரஸ் சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இடம்பெற தவிசாளரினால் ஏற்பாடாகியிருந்தது. எனினும் பிரதேச சபைக்கு வருகைதந்த பொலிஸார் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை எனத்தெரிவித்து தடைவிதித்தனர்.

இதனைத் தொடர்ந்து தவிசாளரினால் இங்கே சுகாதார ஒழுங்குகள் அனைத்தும் பேணப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட சிலரே இந்த இடத்தில் நிற்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளியைப் பேணுகின்றனர். கைகள் கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான அனுஸ்டிப்பாகும் இந் நிலையில் எவ்வாறாக தடை யேற்படுத்த முடியும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொலிஸ் தரப்புடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தவிசாளர் தன்னுடைய வாகனத்தில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்கான பொருட்களை எடுத்துவந்து எவரும் இன்றி தான் தனியே அஞ்சலி செலுத்த முற்பட்டார். அதற்கும் பொலிஸ் தரப்பினால் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இடையூறுகளை மீறி தவிசாளரினால் ஈகைச்சுடறேற்றி அஞ்சலிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் வளாத்தின் நின்றிருந்த இடத்தில் நின்றவாறு அஞ்சலித்தனர்.

தெடர்ந்து தவிசாளரினால் நாம் எமது உறவுகளை அஞ்சலிக்கின்றோம் இதில் யாரும் தடை ஏற்படுத்த முடியாது. மாறாக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் அநீதிகளுக்கு பொறுப்புச் சொல்லுதலே தேவை என பிரதேச சபை வளாகத்தின் வெளிப்புறத்தில் அங்காங்கே நின்றிருந்தவர்களை நோக்கி உரையாற்றப்பட்டது