முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்(படங்கள் இணைப்பு)

366 0

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றழிக்கப்பட்டதன்  நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில்  இன்றைய தினம் தமிழ்  இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

 இன்று காலை பத்து முப்பது மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த  இலட்சுமணன் பரமேஸ்வரி அவர்களால்  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஏனைய  உறவுகளுக்கான சுடர்கள்  ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இருப்பினும் சிறிலங்கா  பொலிஸ் ,இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுகின்ற நிலையில் அவர்களுக்கு பல்வேறு சவால்களாக சிறிலங்கா  பொலிஸ் ,இராணுவத்தினர் செயற்ப்பட்டபோதும் உரிய தரப்புகளை அணுகி சுகாதாரப் பிரிவினர் இங்கே வருகை தந்து அவர்கள் சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு அதை உரிய முறையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் , கந்தையா சிவநேசன் , மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் ,ஆண்டியையா புவனேஸ்வரன் ,  மற்றும் முன்னாள் யாழ் மாநகர மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .