பௌத்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

318 0

monkமட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக வாயில் கதவினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல காலமாக அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்களை குறித்த மதகுரு விடுத்துவரும் நிலையில் இதுவரையில் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்பாக அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதுடன், அந்த பொலிஸ் அதிகாரிக்கு முன்பாகவே மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அதிகாரியை மதகுரு திட்டியபோது, பொலிஸ் உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.

இது இந்த நாட்டில் சட்ட நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன் நல்லாட்சி என்று சொல்லப்படுவதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும், அவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அகற்றவேண்டும் என்றும் இரு கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

குறித்த மதகுரு மூலம் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சுதந்திரமான முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படுத்தும் வரையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், பொதுமக்கள் அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.