இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு

204 0

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 124ல் இருந்து 149 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 690 பேருக்கும், டெல்லியில் 576 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.