அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் களேபரம்- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

215 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிறைக் கைதிகள் இன்று அமைதியற்ற விதத்தில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.