பழனி கோவிலில் சீனப்பெண் தர்ணா- விசா முடிந்தும் தங்கி இருந்தவரை வெளியேற்ற நடவடிக்கை

313 0

பழனி கோவிலில் தர்ணாவில் ஈடுபட்ட சீனப் பெண்ணின் விசா காலாவதியாகி விட்டதால் அவரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பழனி கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் வைத்து பரிசோதனை செய்தபிறகு உள்ளே அனுமதித்து வந்தனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் சீனாவைச் சேர்ந்த சோசோன் (வயது35) என்பவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் அவருடன் வந்த அவரது தோழி அஸ்வினி (29) என்பவரை மட்டும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

சோசோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பழனி கிரி வீதியில் மின் இழுவை ரெயில் நிலையம் அருகே திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் அஸ்வினி சாமி தரிசனம் செய்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அவருடன் சீனப்பெண் சென்று விட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சீன நாட்டில் சான்சி பகுதியை சேர்ந்த சோசோன் கோவையில் உள்ள ஒரு யோகா மையத்தில் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இவருக்கு வழங்கப்பட்ட விசா கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டதாவும் ஆனால் தற்போது மார்ச் மாதம் ஆகியும் அவர் தனது சொந்த நாட்டுக்கு செல்லாமல் இந்தியாவில் சுற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

விசா கால நீட்டிப்புக்கு அவர் விண்ணப்பம் அளித்துள்ளாரா? என்று விசாரணை நடத்தப்படும். அவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக அவர் தங்கி இருப்பது தெரிய வந்தால் அவரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.