தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ‘தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ’ கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் ‘மனோ ஐங்க சர்மா’ தலைமையிலான குழுவொன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்களை வவுனியாவில் மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டம் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட ‘தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி’ எனும் பெயரில் நேற்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் குறித்த சுயேட்சைக் குழுவின் வேட்பு மனு தாக்கல், பேசாலை முருகன் ஆலய பிரதம குரு, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் ‘மனோ ஐங்க சர்மா’ கட்சி, விதிமுறைகளுக்கு அப்பால் சுயேட்சையாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பேட்டியிட உள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை இந்த செயற்பாட்டுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகர சபையின் தலைவராகவுள்ள ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை ஒரு வருடத்தின் பின்னர் மாற்றி அக்கட்சியை சார்ந்த மனோ ஐங்க சர்மாவிற்கு வழங்குவதாக கட்சி கூறிய போதும், இதுவரை வழங்கவில்லை என கூறியே சுயேட்சைக்குழு தேர்தலில் போட்டியிடுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பேசாலை முருகன் ஆலய பிரதம குருவும் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவருமான சிவசிறி மஹா தர்ம குமார குருக்களும் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

