இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமும் காரணமாவோம்- ஐங்கரநேசன்

247 0

வன்முறைக் கலாசாரத்தை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களைப் போன்று செயற்பட முன்வரவேண்டும் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமே காரணமாக அமைவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், கோண்டாவில் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று நிலையத் தலைவர் சி.ஆனந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சனசமூக நிலையங்கள் சனங்களைச் சமூக மயப்படுத்துகின்ற பணிகளைச் செய்வதால்தான் சனசமூக நிலையங்கள் என்று பெயர்பெற்றன. முறையாக இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களுக்கு ஒப்பானவை. மக்களிடையே இடையறாத உறவுகளைப் பேணவைத்து நல்வழிப்படுத்தி, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பின் பிரசன்னம் உத்தியோகப் பற்றற்ற விதத்தில் இருந்தது. ஆனால், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு உத்தியோகபூர்வமாக அதிகரித்து வருகின்றது.

அரச வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் இராணுவத்தினர் உட்கார்ந்திருக்கின்றனர். மணற் கொள்ளையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் காவற்துறைக்குப் பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தபபட்டுள்ளனர். நாடு மெல்ல மெல்ல இராணு ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிரீஸ் பூதங்கள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. பொதுமக்களை அச்சுறுத்திய கிறீஸ் பூதங்களைப் பிடிப்பதற்கு காவல்துறை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் மாத்திரம்தான் கிறீஸ் பூதத்தைப் பிடித்து சனசமூக நிலையத்தினுள் அடைத்து வைத்தது. அந்தளவுக்கு கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் கிராமத்தை வழிப்படுத்துவதிலும் கிராமத்தைப் பாதுகாப்பதிலும் காவல்நிலையம் போன்றே செயற்பட்டு வருகின்றது.

அதனால்தான் இதன் இயங்கு எல்லைக்குள் வாழுகின்ற சமூகம் குற்றச் செயல்களில் ஈடுபடாத நற்சமூகமாக விளங்குகின்றது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய சனசமூக நிலையங்களும் கிராமங்களை நல்வழிப்படுத்துகின்ற காவல் நிலையங்கள் போன்று செயற்பட முன்வரவேண்டும்” என்று தெரிவித்தார்.