ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது-இல்லாவிட்டால் சஜித்தோடுதான் பயணம்- இராதாகிருஷ்ணன்

316 0

ரணிலும் சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இணைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவ்வாறு நடைபெறாவிட்டால் சஜித் அணியையே ஆதரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் தமக்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவான மலையக மகளிர் முன்னணி  இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை ஹற்றனில் கொண்டாடியது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மத்தியஸ்தத்துடன் ரணில் தரப்பும், சஜித் அணியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது சந்தோசமான தகவலாகும். இருவரும் பிளவுபடாமல் ஐக்கியமாகப் பயணித்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும்.

சிலவேளை, இணைவு சாத்தியமில்லாமல், பொதுத்தேர்தலில் இரு அணிகள் போட்டியிட்டால் தமிழ் முற்போக்குக் கூட்டணியாகிய நாம் சஜித் பக்கமே நிற்போம். அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே, இனி முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். எமது மக்களும் சஜித் தலைமையிலான அணிக்கு பேராதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அதேவேளை, சட்டம் அனைவருக்கும் சமமாகும். எனவே, பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க குற்றம் இழைத்திருந்தால் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றம் இழைக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தான் நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்துக்கே கூடுதல் வேலைகளைச் செய்தார். அவர் நாட்டுக்காக பெரிதாக எதனையும் செய்யவில்லை. எனவே, தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி, பொலன்னறுவை மாவட்டத்துக்குள்ளேயே அவர் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.