யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் விடுதலை அடைய வேண்டும்- அவுஸ்ரேலிய செயற்றிட்ட தலைவர்

228 0

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் 2020இல் விடுதலை அடைய வேண்டும் என அவுஸ்ரேலிய உள்வாங்கலுடனான திறன் அபிவிருத்திச் செயற் திட்டத்தின் அணித் தலைவர் டேவிட் அப்லெற் (David Ablett Team Leader for Inclusive Growth) தெரிவித்தார்.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சினூடாக அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் திட்டங்களில் பங்கு பற்றிய சாதனைப் பெண்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களது அனுபவங்களும் பகிரப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய டேவிட் அப்லெற், “உலக நாடுகள் பல்வேறு முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டிருந்தாலும் பாரம்பரிய மதம், கலாசாரம், பண்பாடுகள் ஊடாக பெண்கள் இன்னமும் அபிவிருத்தி அடையாமலும் விடுதலை அடையாமலும் இருந்து வருகின்றார்கள்.

பெண்கள் முன்னேற்றமடைவதற்கு அவர்கள் சார்பில் உடைத்தெறியப்பட வேண்டிய பல்வேறு தடைகள் இன்னமும் உள்ளன. இந்த விடயங்களில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற இந்த வேளையில் பெண்கள் சார்பாக முக்கியத்துவமளித்து அபிவிருத்தியின் இலக்கை எட்டுவதற்கு ஏற்ற இயங்கியல் பொறி முறைகள் உருவாக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.