பிரான்சு புளோமெனில் பகுதியில் மாவீரர்கள் பொதுமக்கள் நினைவாக நடுகல்!

408 0

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான புளோமெனில் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் நீண்டகால விருப்பத்தையும் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து மாநகரமுதல்வர் மதிப்புக்குரிய Thierry MEIGNEN அவர்கள் புளோமெனில் CIMETIERE DU BLANC MESNIL மைதானத்திற்குள் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுதல் நிகழ்வு நடைபெற்றிருந்தது. மதியம் 13.00 மணிக்கு கொட்டும் மழைக்குள்ளும் மாநகர முதல்வர், உதவிமுதல்வர் மற்றும் துணைவியார், மாநகர முக்கியஸ்தர்கள், ஏனைய பிரெஞ்சு மக்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், பரப்புரை, மாவீரர்பணிமனை பொறுப்பாளர்கள், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர், செயலாளர் மற்றும் ஏனைய தமிழச்சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அனைவர் மத்தியிலும் அடிக்கல்லுக்கான கலவையினை முதல்வர் முதலில் இட ஏனையோரும் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் நடுக்கல்லுக்கான கலவையினை இட்டிருந்தனர்.

இதில் உரையாற்றிய முதல்வர் இங்கு தனது பிரதேசத்தில் வாழும் தமிழ்மக்கள் பற்றி தான் நீண்டகாலமாக அறிவார் என்றும் அவர்களுக்கு சகல வழிகளிலும் பெரும் உறுதுணையாக தான் இருந்து வருவதாகவும் இங்கு வாழும் தமிழ்மக்களினை பிரதிநிதிப்படுத்தும் பிராங்கோ தமிழச்சங்கத்தின் நீண்டநாள் விருப்பமான தமது மண்ணையும் தமது மண்ணுக்காக உயிர் கொடுத்தவர்களை ஆண்டு தோறும் நினைவுகூர எமக்கு நினைவுக்கல் நிறுவவேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்காக இதனை இந்தக்காலத்தில் என்னால் அவர்களுக்கு நாட்டிக்கொடுப்பதையிட்டு மனமகிழ்வடைவதாக கூறியிருந்தார். இந்த சின்னங்கள், நினைவுக்கற்கள் வரும் அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை சொல்லுகின்ற விடயங்களாகவே பார்க்கப்படும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் இந்த மைதானத்திற்குள் பிரான்சு நாட்டின் விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களுக்கும், 2 ஆம் உலகயுத்தத்தின் போது உயிர்தந்த இராணுவத்தினருக்கும், மக்களுக்கும் நினைவுக்கல் நிறுவப்பட்டுள்ளமையோடு வேறு பல நினைவுச்சின்னங்கள் இந்த இடத்தில் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அடிக்கல் நாட்டுதல் நினைவாக முதல்வரால் தமிழ்மக்களின் சமாதி நினைவுக்கல் மார்ச் 1 ஆம் நாள் என்ற சின்னம்பொறிக்கப்பட்ட நினைவு பொருளினையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரான்சில் தற்பொழுது நடைபெறவுள்ள உள்ளளூராட்சித் தேர்தலில் பிராங்கோ திரு. கிங்ஸ்ரன் அவர்களையும் ஒரு வேட்பாளராக பதிவுசெய்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நினைவுக்கல்லானது இந்த வருட நடுப்பகுதிக்குள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.