கிளிநொச்சியில் கடந்த வாரம் இரண்டு மாணவர்களிடம் கத்தியை காட்டி அவர்களது துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரே பாணியில் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திலிருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களிடமே துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
காலை பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவர்களிடம் தங்களையும் அவசரமாக ஏற்றிச் செல்லுமாறு கனகபுரம் டிப்போ வீதியில் நடந்து சென்று இளைஞர் ஒருவர் கோரியுள்ளார் இரக்கப்பட்ட மாணவன் குறித்த இளைஞனை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த போது இடையில் குறித்த இளைஞன் தான் ஒடட்டுவதாக தெரிவித்து மாணவனிடமிருந்து துவிச்சக்கர வண்டியை பெற்று ஓடிக்கொண்டிருந்த போது கனகபுரம் பாடசாலையின் பின் வீதியில் வைத்து மாணவனின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தமிட்டால் வெட்டிவிடுவேன் இறங்கி ஒடிவிடு என அச்சுறுத்திவிட்டு துவிச்சக்கர வண்டியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இவ்வாறு இந்துக் கல்லூரிக்குச் சென்றுக்கொண்டிந்த மாணவனிடம் தனது முச்சக்கர வண்டி கடையில் திருத்த விட்டுள்ளேன் அதுவரை கொண்டு சென்று விடுமாறு இளைஞன் ஒருவர் கோரியுள்ளார்.
மாணவனும் இளைஞனை ஏற்றுவதற்காக இறங்கிய போது சடுதியாக கத்தியை எடுத்து காட்டிய இளைஞன் மாணவனை அச்சுறத்திவிட்டு துவிச்சக்கர வண்டியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திலிருந்து பல கிலோ மீற்றர்கள் அப்பால் உள்ள பாடசாலைக்கு வரும் வறிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

