உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் 12பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

284 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்    கைதானோரில்  12 பேருக்கு மீண்டும்  எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  கல்முனை நீதிமன்ற  நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி  விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள்  அனைவரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும்  பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த சந்தேகநபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு  இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி,  கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.