மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு இஸ்லாமிய பெண்கள் உட்பட நால்வர் கைது

330 0

மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு வந்த இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராதனை இடம்பெற்றது. இதன்போது அங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஆலத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் ஆகியோரே ஆவர்.

மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் சீயோன் தேவலாயத்துக்கு அவர்கள் வந்ததாகவும் அங்கு ஆலயம் பூட்டியுள்ளதையடுத்து, ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் வந்தனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்