தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்- சீனா

474 0

201607010424099743_Will-not-accept-UN-tribunal-verdict-on-South-China-Sea_SECVPFதென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது தென் சீனக்கடல். இது சிங்கப்பூர், தைவான் ஜலசந்திக்கு நடுவே இருக்கிறது. உலகின் 3-ல் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. தவிரவும், இந்தக் கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தென்சீனக்கடலின் பெரும்பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தென்சீனக் கடலில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. ஆனால் சீனாவின் மேலாதிக்கம், சர்வதேச அளவில் கடந்த காலத்தில் கண்டனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை ஐ.நா. சட்டதிட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின்மீது அந்த தீர்ப்பாயம் வரும் 12-ந்தேதி தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லெய் நேற்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்த தீர்ப்பாயம், பிலிப்பைன்சின் ஒருதலைப்பட்சமான வேண்டுகோளின்படி அமைக்கப்பட்டதாகும். இது தனது இறுதி தீர்ப்பை ஜுலை 12-ந் தேதி வழங்க உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கிற அதிகார வரம்போ, இந்தப் பிரச்சினையை விசாரிக்கிற அதிகார வரம்போ அந்த தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறேன். இந்த விவகாரத்தை அந்த தீர்ப்பாயம் விசாரித்திருக்கக்கூடாது. தனது தீர்ப்பை வழங்கவும் கூடாது.

பிலிப்பைன்ஸ் தொடுத்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பை ஏற்க மாட்டோம். இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம். பிலிப்பைன்ஸ் போட்ட வழக்கு, சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும்.

இந்த வழக்கை சீனா ஏற்காததும், விசாரணையில் பங்கேற்காததும் சர்வதேச சட்டத்தின்படிதான்.  சீனா தன் நில எல்லை அல்லது கடல் எல்லை விவகாரங்களில் மூன்றாவது நபர் மத்தியஸ்தம் செய்வதை ஒரு போதும் ஏற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment