போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி மன்னாரில் கையெழுத்து வேட்டை!

212 0

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை மன்னார் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து வேட்டையில், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க அதிகாரிகள், மன்னார் வளர் பிறை பெண்கள் அமைப்பினர், நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெறப்பட்ட கையெழுத்துகள் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு 50 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகளை வரும் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மகளிர் தின நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.