புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரி உபரிநீரை திருப்பிவிட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: முதல்வர் உறுதி அளித்ததாக விவசாயிகள் தகவல்

260 0

காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திருப்பிவிட, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதாக நெடுவாசல் விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சேலம் தலைவாசலில் கடந்த 9-ம் தேதி நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்தார்.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகள் முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் நேற்று சென்னை வந்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மனு ஒன்றையும் அளித்தனர்.

பின்னர், நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த ஓய்வுபெற்றஆசிரியர் வேலு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதை, முறைப்படிசட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரும் அதை ஏற்றுக்கொண்டு, காவிரி உபரிநீரை புதுக்கோட்டைக்கு கொண்டுவர இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். இந்த அறிவிப்புகளுக்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.