தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சார்ள்ஸ்

212 0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜாட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சட்டத்தரணி எஸ்.டினேஸன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் கிளைக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆயராயப்பட்டது. மேலும் இவ்வருடம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழரசுக் கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை நியமிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது, கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பிரதேச சபை உறுப்பினரினால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.