கடந்த ஆட்சியின் அநியாயங்களை மூடிமறைக்க சில அரசியல்வாதிகள் முயற்சி- ஜீவன்

292 0

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களை மூடி மறைப்பதற்காகவே சில அரசியல்வாதிகள் இ.தொ.கா.விமர்சிக்கின்றனரென அக்கட்சியின்  இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இ.தொ.கா.கட்சியின் இளைஞர் அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தில் இருக்கும் பொழுது தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாயை பெற்றுக்கொடுப்பதற்கு முடியாமல் போன முதுகெழும்பற்ற இவர்கள், 1000 ரூபாயை பெற்றுக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரசை விமர்சிப்பதானது சாத்தான் வேதம் ஓதுவது போன்றே உள்ளது.

கடந்த காலத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அது தரமாக இருக்கவில்லை. மேலும் பல வீட்டுதிட்டங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து ஆட்சி மாற்றத்தின் பின் பயனாளர்கள் எம்மிடம் இது தொடர்பில் முறையிட்டிருந்தனர்.

எனவே இனிவரும் காலங்களில் மோசடி இல்லாமல் தரமான, பல்வேறு வசதிகளுடன் கூடிய வீட்டுத்திட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதுமட்டுமில்லாமல் கடந்த அரசாங்க காலத்தில் மலையகத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு பாவனைக்கு ஏற்ற வகையில் இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

அதேபோன்று கண்டி மாவட்டத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு கூட அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. நாங்கள் கொண்டு வந்த வேலைத்திட்டங்களை வைத்துக் கொண்டு தாங்கள் செய்தது போல் பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களை மூடி மறைப்பதற்கும், மக்களிடையே அனுதாப வாக்குகளை பெறுவதற்கும்தான் அன்று முதல் இன்று வரை இ.தொ.காவை விமர்சித்து வருகின்றனர்.

மக்களுக்கு பயன்பெறும் வகையில் வேலைத்திட்டங்களை செய்யாமல், ஹந்தானை தோட்டத்தில் 22 ஏக்கர் காணி அபகரித்து கொண்டதுதான் இங்கு சிலரின் சாதனையாக இருக்கின்றது.

ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா சொல்லியிருந்தது. அதனை இன்று பெற்றுக்கொடுத்து விட்டது. ஆனால் 50 ரூபாயை பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள், முற்பணமாக 5000 ரூபாயை வாங்கி கொடுப்பதாக கூறியவர்கள் அதையும் வாங்கி கொடுக்கவில்லை.

எனவே இனிவரும் காலங்களிலாவது கோமாளி தனமான அரசியலை கைவிட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்வது பற்றி சிந்தியுங்கள்” என்றார்.