உலகத் தமிழர்கள் எமக்கான முழு ஆதரவினை வழங்க வேண்டும்- அனந்தி

306 0

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

உருவாக்கப்பட்டுள்ள இந்தப் கூட்டணி ஒருவர் அல்லது இருவரால் கட்டப்பட்டது என்றல்லாமல், வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்து மற்றும் உலகத் தமிழர்கள் சார்ந்த ஆதரவைக் கோரி நிற்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய ஒரு இணக்க அரசியலுக்குள் சென்றிருந்த கூட்டமைப்பினுடைய போக்கை எதிர்த்து, அங்கிருந்து வெளியேறிய நாங்கள் ஒரு கூட்டாக நிற்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறிச் செயற்பட்டு வருகின்றது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நான் உட்பட பலர் வெளியேறி இருக்கின்றோம். நாம் இன்று மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

இந்தக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும். மக்கன் எமக்கான முழு ஆதரவினைத் தர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.