வேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம்!

333 0

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் இன்று (09) காலை காந்தி பூங்கா முன்பாக பேரணியாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையினை 35க்கு மேல் உயர்த்துமாறு கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“உயர்த்து உயர்த்து வயதெல்லையினை உயர்த்து, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேதனையினை கொடுக்காதே, பிரிவினையின்றி நியமனம் வழங்கு, பொதுத்தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்கு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரிவினைகள் இல்லாமலும் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகைகளிலும் நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.