ஐ.தே.க.வின் செயற்பாடே பயங்கரவாதம் தலைத்தூக்க காரணம்- நாமல்

253 0

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டினால்தான் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கியதாக ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நான்கரை வருடங்களாக இந்த நாட்டு மக்கள் துன்பத்தை அனுபவித்தார்கள்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு நாம் மட்டுமன்றி, தேரர்களும் முகம் கொடுத்தார்கள். தேரர்களை தேவையில்லாமல் விமர்சித்து, இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள்.

அதாவது 83 ஆம் ஆண்டு கலவரம் முதற்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி இனங்களுக்கிடையில் பிரச்சினையை மட்டும்தான் ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

இந்தப் பிரச்சினைத்தான் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கவும் காரணமாக அமைந்திருந்தது. இறுதியாக ஈஸ்டர் தாக்குதல்வரை இது நீடித்தது. கலவரத்தை நிறுத்தவும் இவர்கள் முற்படவில்லை.

அத்துடன் பயங்கரவாதத் தாக்குதலை நிறுத்தவும் முற்படவில்லை. இதனால்தான் அரசியல் செல்வாக்கை இவர்கள் இழந்தார்கள் .

மேலும் குறைந்தது, வீதிகளையேனும் கடந்த அரசாங்கம் நிர்மாணித்துள்ளதா? இல்லை. இவர்களால் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இவர்களையெல்லாம் தலைவர்கள் என்றுக் கூறுவதே வெட்கத்துக்குரிய விடயமாகும். இவ்வாறானவர்கள்தான் எம்மை திருடர்கள் என்றார்கள்.

2015 தேர்தலின்போது கூறிய ஒரு வாக்குறுதியையேனும் இவர்கள் நிறைவேற்றியுள்ளார்களா என மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.