தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்குடன் கூட்டணியை உருவாக்கவில்லை – சீ.வி.

368 0

தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் கூட்டணியை தாம் உருவாக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பதவியும் சலுகைகளும் முக்கியம் என்று நான் நினைத்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே ஒட்டிக்கொண்டு இருந்திருப்பேன்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் முகவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டபோதிலும் ஆசை வார்த்தைகள் கூறிய போதிலும் நான் விலை போகவில்லை.

அதேபோல அண்மையில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் வாருங்கள் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அழைப்பு விடுத்திருந்தார். ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவர்களுடன் இணையவில்லை. பதவிகளும் சலுகைகளும் எனது நோக்கமல்ல. மக்களின் ஆணைக்கு விரோதமாக நான் ஒருபோதும் நடக்க மாட்டேன்” என மேலும் தெரிவித்தார.