பகிடிவதை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள சத்தியமூர்த்தி

297 0

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. என கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாம் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிரானவர்கள், வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்திலிருந்து முற்றாக களையப்படல் வேண்டும், நீண்ட கால யுத்தம் அதன் காரணமாக ஏற்பட்ட உடல், உள ரீதியாக வடுக்கல் என்பவற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத ஒரு சமூகத்திற்குள் பகிடி வதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வக்கிர செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

எதிர்கால சமூகத்தில் பொறுப்புக்களை ஏற்கவுள்ள, சமூகத்தை வழிநடத்தவுள்ள படித்த இளம் சமூகத்திற்குள் காணப்படும் இவ்வாறான வன்முறை எண்ணங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது. வலிந்துதவும் தொண்டு நிறுவனமான எமது கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது பல்கலைகழக மாணவர்களின் உயர் கல்விக்காக புலம் பெயர் எம் உறவுகளின் உதவியுடன் வருடந்தோறும் பெருமளவு நிதியினை செலவழித்து வருகிறது. விழிமியங்கள் நிறைந்த, பண்பான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் எண்ணத்துடன் நாம் இப் பணியை சிரமங்களுக்குள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் நாம் இந்த பகிடி வதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு நாம் என்றும் எமது ஆதரவினை வழங்குவோம். பகிடி வதை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகள் மீது இடம்பெறுகின்ற உடல், உள ரீதியான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். பல்கலைகழக மாணவர்கள் சமூகத்தின் முன்மாதிரிகளாக, சமூகத்தை வழிநடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். வன்முறை கலாசாரங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல கனவுகளுடன் உயர் கல்விக்காக பல்கலைகழகம் அனுப்புகின்றனர். பகிடி வதையில் ஈடுப்படுகின்ற மாணவர்களை கூட பல்கலைகழகத்தில் படிப்பிப்பதற்கு பல பெற்றோர்கள் படும் துன்பங்கள் நாமறிவோம். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை வழங்கி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் நாம் இந்த இடத்தில் கேட்டுக்கொள்வதோடு, பல்கலைகழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்கள் வாழ்கின்ற சமூகங்களும் பொறுப்பு கூறுபவர்களாகவும், இருக்க வேண்டும் எனவும் எனத் தெரிவித்துள்ளார்