மிரட்டும் கொரோனா – சீனாவில் ஒரே நாளில் 65 பேர் பலி

250 0

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 24,324 பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 65 பேர் பலியான சம்பவம் சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.