இறைச்சியை வாரக்கணக்கில் பிரீசரில் வைத்து விற்பனை செய்வதால் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று சீனாவில் படிக்கும் திருப்பூர் மாணவர் அபிஷேக் கூறி உள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய்க்கு 490-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் நோய் உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனாவில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்புக்காக இந்தியா வந்துள்ளனர். திருப்பூரை அடுத்துள்ள கணக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சண்முகத்தின் மகன் அபிஷேக் சீனாவில் உள்ள ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 1-ந் தேதி அபிஷேக் திருப்பூர் வந்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து அவர் கூறியதாவது:-
இறைச்சியை வாரக்கணக்கில் பிரீசரில் வைத்து விற்பதாலும் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம். சீன மக்கள் பாதியளவு வேக வைக்கும் இறைச்சியை விரும்பி உண்ணுகின்றனர்.
சீனாவில் வுகான் மாநிலத்தில் மட்டும் தான் இந்த பாதிப்பு உள்ளது. நாங்கள் இருக்கும் ஜிங்ஜியாங் மாகாணம் வுகான் பகுதியில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சீனாவின் குன்மிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்ததும் முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சீனாவில் இருந்து வந்த அனைவரும் சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.