தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார்

227 0

அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டை வியாபம் ஊழல் என்று பேசுகிறார்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி மூலம் வெளிப்படையான விசாரணை நடத்தி அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நடந்த தவறை வைத்து ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி.யை நாம் சந்தேகப்படக் கூடாது. ஏன் என்றால், அதன் அமைப்பு சரியாக இருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கை அவர் சந்திப்பார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தமிழகத்தில் வசித்து வரும் ஜெயின், பாரசீகர்கள் போன்ற அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். தி.மு.க. போன்ற கட்சிகள் வி‌‌ஷ வித்துக்களை பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டோடு எல்லோரும் ஒருமித்தவர்கள் என்ற அடிப்படையில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் வாழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. இங்கு வேற்றுமை காட்டி அதன்மூலம் ஆதாயம் தேடலாம் என்ற அரசியலை கையில் எடுத்தால் நிச்சயமாக அவர்கள் தான் தோல்வி அடைவார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை அண்ணா சொன்ன ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற அடிப்படையில் தான் எங்கள் பயணம் தொடரும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.