தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டவரை கொலை செய்த பெண் கைது – யாழில் சம்பவம்

472 0

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவிலில் ஆணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டமையினால் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து தனிமையில் வசித்து வந்த ரத்தினம் குகேந்திரன் (வயது 56) என்பவர் நேற்று (புதன்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது சடலத்தில் காணப்பட்டன. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வாக்குமூலம் அளித்த குறித்த பெண்,  “என்னிடம் தவறாக நடக்க அவர் முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்’ என வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.