கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை: பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு வைகோ கண்டனம்

272 0

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள், மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். தமிழக அரசுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அங்கு இடம்பெற்று இருப்பதாகக் கூறி, செய்தி அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை காலி செய்ய வைத்தது.

இன்று அதிகாலையில் பத்திரிகையாளர் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பத்திரிகையாளர் அன்பழகன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக காவல்துறை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.