முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தி வந்தாலும், கட்சியின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளார் என்பதே உண்மை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன் போடைஸ் என்.சி தோட்டப்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் பிரதமராக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம்.
சஜித் பிரமேதாசவை ஆட்சிபீடம் ஏற்றக் கூடிய சந்தரப்பம் மீண்டும் எமது கைகளுக்கு கிடைத்துள்ளது. எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றனர். எனவே இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்க வேண்டும். அவர் பிரதமாரக வந்தால் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுத்து ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டும்.
எனவே மலையக மக்கள் கடந்த காலங்களில் எமக்கு வாக்களித்து எம்மை தெரிவு செய்து மக்கள் சேவைக்கு வழிவகுத்து கொடுத்தது போல் இம்முறை தேர்தலிலும் எமக்கு வாக்களித்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புகளை பெற்றுதர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

