சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க கூடாது – திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை

307 0

சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை விலைக்கு வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூரில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் திருப்பத்தூர் எஸ்.ஆர்.எஸ். சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் சார்பாக சட்டப்படியான தத்தெடுத்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தத்து கொடுப்பதை தவிர்க்கவும், குழந்தைகளை முறைப்படி தத்தெடுப்பது வலியுறுத்தியும், சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாநில தத்து வள மையம் திட்ட இயக்குனர் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். அனைவரையும் எஸ்.ஆர். டி.பி.எஸ். சிறப்பு தடுப்பு மைய இயக்குனர் தமிழரசி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கலந்துகொண்டு குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு கையேடுகளை கிராம பகுதி சமுதாய செவிலியர்களுக்கு வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் குழந்தை தொட்டில் திட்டம் தொடங்கப்பட்டு குழந்தைகள் மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

சமுதாயத்தில் குழந்தைகள் தத்து எடுப்பது குறித்தும், எளிமையான தீர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.

குழந்தை இல்லாத பெற்றோர்கள் சட்டப்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் தத்தெடுக்க வேண்டும்.

சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை விலைக்கு வாங்குவோர் மீதும் குழந்தைகள் விற்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக தத்தெடுத்தல் தடுக்க செவிலியர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.