பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நெல்லை கண்ணன் வீட்டை பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். அப்போது நெல்லை கண்ணனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் பா.ஜனதாவினர் சென்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து நெல்லை கண்ணனை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை போலீசார், ஆம்புலன்சில் மதுரைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர் மதுரைக்கு வருகிற தகவலை அறிந்த அங்குள்ள பா.ஜனதாவினர் திரண்டனர். மதுரையில் உள்ள பிரபலமான 3 ஆஸ்பத்திரிகள் முன்பு நெல்லை கண்ணனுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாரானார்கள்.
இதுபற்றி நெல்லை கண்ணனை அழைத்து சென்றவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் திருவனந்தபுரத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. மேலப்பாளையம் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் அறை எடுத்து தங்கியிருப்பது பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அந்த விடுதியை சுற்றி வளைத்தனர்.
இதனை அறிந்த பா.ஜ.க.வினர் தனியார் விடுதி முன்பு ஒன்று திரண்டு நெல்லை கண்ணனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார் நெல்லை கண்ணனை கைது செய்து விடுதியின் பின்புறம் வழியாக அழைத்து சென்று காரில் ஏற்றினர். அப்போது பா.ஜ.க.வினர் அவரை தாக்க முயன்றனர். அவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடுத்தனர். அந்த சமயம் அங்கு பதற்றமான சூழல் உருவானது. உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

அவர் இன்று காலை நெல்லை கொண்டு வரப்பட்டார். நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், அதனடிப்படையில் அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் மேலப்பாளையம் போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட அவரை நேராக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். அங்கு நெல்லை கண்ணனின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிய பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துகின்றனர். நெல்லை கண்ணன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டிருந்ததால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

