தி.மு.க.வுடன் மனக்கசப்பு- ரஜினிகாந்துடன் கூட்டணி சேர காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்

252 0

தி.மு.க.வுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக அரசியலுக்கு வரக்கூறி வற்புறுத்தி வந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி பேச்சு எழுந்தது. 25 ஆண்டுக்கும் மேற்பட்ட காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.

தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார்.

அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

கட்சி தொடங்கவில்லை என்றாலும் ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி மற்ற கட்சியினரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக குடிநீர் பிரச்சினையில் அவரது மக்கள் மன்றத்தினரின் பணிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.

2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பிலேயே சிஸ்டம் சரியில்லை என்று அரசியலை குறை சொன்னார். தான் அரசியலுக்கு வந்தால் அது ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று சொன்னவர் ரசிகர்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதையும் அறிவித்தார்.

அதன் பின்னர் ஸ்டெர்லைட் போராட்டம், ராஜீவ் கொலையாளிகள் போன்ற வி‌ஷயங்களில் ரஜினி சொன்ன கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மோடிக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த பேட்டிகளும் பரபரப்பானது.

பா.ஜனதா தலைவர்கள் சிலர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக பார்த்ததாலும் மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேட்டிகள் அளித்ததாலும் அவர்மீது பா.ஜனதா ஆதரவாளர் என்ற பிம்பம் விழுந்தது. ரஜினி இதையும் சமீபத்திய பேட்டியில் உடைத்தார். தன் மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக பரபரப்பாக கூறினார்.

ரஜினி கட்சி தொடங்கினால் யாருடன் கூட்டணி சேர்வார் என்ற கேள்வி எழுந்தது. பா.ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டார் என்பது அவரது பேட்டி மூலமே உறுதியான நிலையில் கமலுடன் கூட்டணி சேர்வாரா என்ற யூகங்கள் எழுந்தன. கமல்ஹாசன் நடிக்க வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று சென்னையில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்ற பாராட்டு விழா ஒன்று நடை பெற்றது.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை பாராட்டிப் பேசியதோடு, அரசியல் தொடர்பாகவும் சில கருத்துகளை முன் வைத்தார். “எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால், எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்’’ என்றும் குறிப்பிட்டார். ரஜினியும் கமலும் இனைவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது ரஜினியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:-

இந்த உள்ளாட்சி தேர்தல் பங்கீடு வி‌ஷயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் பல்வேறு மனக்கசப்புகள் உருவாகிவிட்டன. அதே நேரத்தில் ரஜினியை நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு பா.ஜனதாவும் வந்துவிட்டது. கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி கூட இந்த ஆண்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ்

ரஜினியோடு காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். ரஜினிக்கு காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள் உண்டு. கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ரஜினியோடு பேசி வருகிறார்கள்.

ஏ.கே.அந்தோனி, மராட்டியத்தில் சுப்ரியா சுலே போன்றவர்கள் ரஜினியோடு பேசி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை ரஜினி தனக்கு நம்பிக்கையான தமிழ்நாட்டு அரசியல் நண்பர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ரஜினியின் நண்பர்கள் ‘ரஜினி என்றால் மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி என ஒரு நற்பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸோடு நீங்கள் சேர வேண்டும். நீங்கள் சம்மதித்தால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். காங்கிரஸ் வருவதாக இருந்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகளும் கூட வரலாம்.

காங்கிரஸின் தேசியம் தான் இப்போது உங்களுக்குச் சரியாக இருக்கும்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கம்போல் ரஜினி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, ‘பார்க்கலாம்‘ என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினியைச் சீண்டி உதயநிதி சமீபத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இதுபற்றி ரஜினி பதில் அளிக்கவில்லை என்றாலும் கடும்கோபத்தில் இருக்கிறார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட்டால் திமுகவின் பலம் குறையும் என்ற கணக்கும் ரஜினி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கும் சமயத்தில் இது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.