மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்- கோட்டாபய

193 0

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

செயற்திறன்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றிக்காக கீழ் மட்டத்திலிருந்து பெரும் சக்தியாக செயற்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்றுவதே தனக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்கள் கையளித்துள்ள சவால்மிக்க பொறுப்பாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கழிவுகளை வெளியேற்றுதல் முதல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் வரை நாம் செயற்படும் விதத்தினை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மக்கள் சிரமங்களை சந்திக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வினைத்திறனான மக்கள்நேய அரச சேவையை உறுதிப்படுத்த வேண்டியது அனைத்து அரச சேவையாளர்களினதும் கடமையாகும்  என ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச சேவையானது ஊழல், மோசடியற்றதாகக் காணப்பட வேண்டுமென்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்று, பொருளாதாரம் பலமாக கட்டியெழுப்பப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்தது.  எனவே மக்கள் அப்போதைய அரசாங்கத்தை நிராகரித்தமைக்கான காரணங்களை புரிந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இல்லையேல் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் நாட்டை உரிய பாதையில் கொண்டு செல்லும் செயற்பாட்டில் புத்திஜீவிகளினதும் நிபுணர்களினதும் பங்களிப்பு பாரிய பக்கபலமாக அமையும் என்றும்  அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், 19 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் அரச நிர்வாகத்திற்கு பாரிய தடையாகக் காணப்படுகின்றது.  இதனை நீக்குவதற்கான பலமான நாடாளுமன்றம் தேவை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான முதன்மை காரணியும் அதுவாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.