தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்- நாளை ஓட்டுப்பதிவு

242 0

தமிழகத்தில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 46 ஆயிரம் பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டன. இதன்படி கடந்த 27-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

4 ஆயிரத்து 700 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 37 ஆயிரத்து 830 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 646 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு 4 வண்ணச்சீட்டுகளை பயன்படுத்தி முதல்கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. 46 ஆயிரத்து 639 பதவிகளை தேர்வு செய்ய நாளை வாக்குப்பதிவு நடத்தப்படகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தலில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 பஞ்சாயத்து தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.

5 மணிக்கு வரிசையில் நிற்ப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் அவர்கள் காத்து இருந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக 25,008 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தலுக்கு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

நாளை நடைபெறும் தேர்தலையொட்டி 61 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,551 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதட்டமான இந்த வாக்குச் சாவடிகளில் நடை பெறும் ஓட்டுப் பதிவை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 315 மையங்களில் வைக்கப்பட் டுள்ளது. நாளை நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குப்பெட்டிகளும் இந்த மையங்களுக்கு நாளை இரவே கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

நாளை ஓட்டுப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்கள் உள்ளன. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் யாரும் புகுந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.