அமரர். லலிதா நவரத்திணம் அவர்களுக்கு எமது இதய வணக்கம்.

466 0

இயற்கையின் உன்னதப் படைப்பில் மானிடப் படைப்பே மிக உயர்ந்ததாக கருதப்படுகின்றது .அறிவின் விழிகொண்டு வாழும் இம்மானிட வாழ்வில், வாழ்வாங்கு வாழ்ந்து மானிட சமூகத்தின் மேன்மைக்காக தம்மை அர்ப்பணித்து வாழும் மாந்தர்கள் உன்னத மனிதர்களாக போற்றப்படுகின்றார்கள். மரணம் இயற்கை மாற்றத்தின் ஓர் படிநிலையாகும். மரணம் முக்காலத்தையும் ஒன்றாய் நிகழ்த்தும் அதிசய வெளிப்பாடாகும். இந்த இயற்கையின் காலச்சுழற்ச்சியின் கரங்களில் ஆழ்ந்து மரணித்த அமரர்.திருமதி லலிதா நவரட்ணம் அவர்களின் இழப்பு எமக்கு ஆழ்ந்த துயரைத் தருகின்றது.

மொழி ஓர் இனத்தின் ஆணிவேராகும். மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது உலக வரலாறு கூறும் பதிவாகும். தமிழீழப் போர்காரணமாக புலம்பெயர்ந்த எம்மக்கள் தாய் மொழியைக் கற்று இனத்தின் ஆணிவேரைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் உருவாக்கப்பட்ட ‘தமிழ்க் கல்விக் கழகம் ‘ தன்னில், இன உணர்வோடு தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய பெருந்தகை திருமதி. லலிதா .நவரட்ணம் அவர்கள் என்பது இனப்பதிவாகும். தமிழ்க் கல்விக் கழகத்தின் பல படிமான நிலைகளில் தனது பங்களிப்பை செலுத்தியதோடு, வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளராக திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், நோயுற்று காலனின் வருகையின் நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதி தளரா தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை மிகத்திறம்படச் செய்தமை அன்னாரின் இனப்பற்றின் ஆழத்தை காட்டி நிற்கின்றது .

அமரர்.திருமதி லலிதா நவரட்ணம் அவர்களின்; பிரிவுத்துயர் சுமந்து நிற்கும் குடும்ப உறவுகளோடும், தோழமை உறவுகளோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து, அவரது ஆத்மா அமைதிபெற இயற்கையை வேண்டி, அவர் நினைவோடு எம் இலட்சியப் பயணங்களை தொடர்வோமென உறுதி கொள்கின்றோம்.

இனத்தின் மொழியைக் காக்கும் கைகள்
இனத்தின் வேரில் பதிவாகும்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.