மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்!

251 0

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டங்கள், தற்போது மேல் மாகாணத்தில்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் அநுர ஜயசேக்கர  தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில்  டெங்கு நோய்த் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்  94,230 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதோடு 90 இக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த வருடம் 51,659 பேர் மாத்திரமே இந்நோய்க்கு உள்ளாகினர் என்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் இந்நோய்க்கு உள்ளானவர்களில் 44.1 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக,  கொழும்பு மாவட்டத்தில் 19112 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14812 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 7665 பேரும், கண்டி மாவட்டத்தில் 8318 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 7458 பேரும், காலியில் 6744 பேரும் அதிகூடியளவில் உள்ளாகியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.