குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- சென்னையில் திமுக தலைமையில் பேரணி

185 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றன. டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பேரணிக்கு தடைவிதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு தி.மு.க. பேரணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் வன்முறை ஏற்பட்டால் தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து தி.மு.க. பேரணி இன்று திட்டமிட்டபடி நடைபெற்றது.
பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை 8 மணியில் இருந்தே தி.மு.க. தொண்டர்கள் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே குவிய தொடங்கினார்கள்.

கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்க 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பல அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணியில் பங்கேற்பதற்காக 10.15 மணி அளவில் வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களை கைகுலுக்கி அவர் வரவேற்றார். இதையடுத்து முக.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக பேரணி தொடங்கியது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஐ.ஜே.கே. கட்சி பொதுச்செயலாளர் சத்தியசீலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.பி.கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், கதிர்ஆனந்த், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, மற்றும் மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, ஜே.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பேரணியில் நடந்து சென்றனர்.

நாஞ்சில் சம்பத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் அணிவகுத்து சென்றனர்.

பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவ்வப்போது அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தனர்.

குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.

பேரணியையொட்டி எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலவரம் ஏற்பட்டால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கூடுதல் கமி‌ஷனர்கள், மேற்பார்வையில் இணை கமி‌ஷனர்கள், துணை கமி‌ஷனர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து புறப்பட்ட பேரணி லேங்ஸ் கார்டன் ரோடு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.

அங்கு தலைவர்கள் பேசுவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். ஊர்வலபாதை மற்றும் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பேரணியின் தொடக்கத்திலும், இறுதியிலும் போலீசாரும் அணிவகுத்து சென்றனர்.