ராஜிதவின் முன் பிணை மனு மீதான விசாரணை திங்களன்று

248 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும்  ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன நேற்று தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனுவை கொழும்பு  பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று நிராகரித்தார்.

தான் கைது செய்யப்படப் போவது எந்த சட்டப் பிரிவின் கீழ்,  எந்த குற்றத்துக்காக என்பதை குறித்த மனுவிலோ அல்லது முன்வைக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியிலோ மனுதாரர் தெரிவிக்காத நிலையில், குறித்த முன் பிணை கோரிக்கை மனுவை ஆராய பெயரிடப்பட்டிருந்தவர்களுக்கு அறிவித்தல் அனுப்ப முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று மாலை மீள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு முன் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னர் முன்வைத்த மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து , 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தின் 21 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக,  முன்னைய மனுவில் இருந்த பிழைகளை திருத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் திருத்தி மீள தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை மனு எதிர்வரும் திங்களன்று ஆராயப்படவுள்ளது.