மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !

262 0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.

அந்தவகையில், இன்று (20.12.2019) மாத்தளை,கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரத்தோட்ட,அம்பங்கங்க,கோரளை,அங்குராகெத்த,ஊவாபரனகம,வெலிமட,எல்ல,ஹல்துமுல்ல,பசறை,லுணுகல,ஹாலிஎல,பண்டாரவளை,அப்புத்தளை,சொரணதோட்ட,பதுளை,படல்கும்பர, மெதகம மற்றும் பிபில ஆகிய பகுதிகளுக்கு  மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,குறித்த பிரதேசங்களில்  மண்சரிவு, சாய்வு இடிந்து வீழ்ந்தல், கற் பாறை சரிவு, நிலவெட்டுச்சாய்வு இடிந்து வீழ்தல், தாழ்விறக்கம்  என்பவற்றிற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் அவதானிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகமுவ, யதவத்த, மாத்தளை, பல்லேபோல, நாவுல  மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கு  அம்பர்  எச்சரிக்கையும்   (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது.

லக்கலை,பல்லேகம, உடுதும்பர மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு  சிவப்பு மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, சாய்வு இடிந்து வீழ்ந்தல், கற் பாறை சரிவு, நிலவெட்டுச்சாய்வு இடிந்து வீழ்தல், தாழ்விறக்கம்,நீர்க்கசிவு  ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.