யாழ்ப்பாணத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு தாக்கம் தொடர்பில் மக்கள் 021 222 5000 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டினை விட தற்போது டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது.டெங்கு காரணமாக இந்த ஆண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாம் டெங்கை கட்டுப்படுத்த துரித நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாகச் சுகாதார அதிகாரிகள் டெங்குக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டாலும் பொதுமக்களும் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பொதுவாகக் கழிவுப் பொருட்களை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் மக்கள் உடனடியாக எமக்கு அறியத் தரவும்.
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள குறைகேள் மையத்தில் மக்கள் அலுவலக நேரத்தில் முறையிட முடியும்.021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் முறையிட முடியும் என்றார்.

