குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை- பாட்டி, இடைத்தரகர்கள் மீது வழக்கு

273 0

குடவாசல் அருகே சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவரது பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த மாதம் இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி விசாரித்தபோது, சிறுமிகளின் பாட்டி அந்த சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் என கருதப்படும் இரண்டு பெண்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்திற்காக விற்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறுமிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீசார் ஈரோடு சென்றுள்ளனர்.